Saturday 6 February 2016

தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குத் தரும் முக்கியத்துவம்

இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?

                                                                                -- இரா. சைலஜா சக்தி

 

 

பகுலு ஒடயும் டகுலு மாரி

யே சிக்கம் குத்தா மொரடன் மாரி

யே வன்ட்டாண்டா ரொம்ப தேறி

ஏ கில்ட்டானான்டா எங்க மாறி



       இது ஏதோ கிரேக்கத் தத்துவம் அல்ல.  மிகச் சிறந்த எதுகை, மோனையுடன் வெளிவந்துள்ள தமிழ் திரைப்படப்பாடல்தான்.

       வணக்கம், நன்றி, பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று சொல்லும்போது ஏன் தூய தமிழில் பேசி கலாய்க்கிறீர்கள் என்ற கேள்வியை தமிழ் அபிமானிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.  தமிழ் மக்கள், மூச்சு விட மறந்தாலும் மறப்போம், குட்மார்னிங், குட்நைட், தாங்க்யூ, வெல்கம் என்று சொல்ல மறக்க மாட்டோம் இல்லையெனில் நாம் படிக்காத பாமரர்கள் என்றழைக்கப்படுவோமே?
      
செகண்ட் லேங்குவேஜ் தமிழ் என்று மாணவர்கள் அலட்சியமாகச் சொல்லும்போது பகீர் என்கிறது. தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தமிழ் செகண்ட் லேங்குவேஜ் என்ற பெயரில் இரண்டாம் மொழியாக பின்னுக்குத் தள்ளப்படும் அவலத்தை என்னவென்று சொல்வது?   என் குழந்தை தமிழில் மட்டும் வீக் எனப் பெருமையடிக்கும் பெற்றோர்களைப் பார்க்கும்போது தமிழ் இனி மெல்லச் சாகும் என்ற வரிகள் உண்மையாகிவிடுமோ என்ற பயம் ஏற்படுகிறது.

       இன்னும் சில பெற்றோர்கள் ஒரு படி மேலே போய் செகண்ட் லேங்குவேஜீக்காக கூட தமிழ் வேண்டாம் என்கிறார்கள். ஹிந்தி அல்லது ஃபிரென்ச் என பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்திவிடுகிறார்கள்.  இவர்களால் பள்ளிகளில் தமிழ் மொழி இரண்டாம் மொழி என்ற அந்தஸ்தையும் இழக்கிறது.  இந்த குழந்தைகளுக்கு தமிழ் வெறும் பேச்சு மொழியாக மட்டுமே மாறிவருவதுதான் கொடுமை. 

       பெரும்பாலான ஆங்கிலப்பள்ளிகள், கந்துவட்டிக்காரர்கள் போல செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.  இவைகளின் ஒரே விளம்பரம், குழந்தைகளுக்கு இங்கிலீஷ் ப்ளுயன்சி என்பது மட்டும்தான்.  தப்பித் தவறி தமிழ் பேசும் குழந்தைகள் கிரிமினல் குற்றம் செய்தவர்கள் போல கடுமையாகத் தண்டிக்கப்படுகிறார்கள்.

       விளைவு தமிழ் பேசுவது தவறு என்ற மனப்பான்மையோடு இன்றைய இளம் பிஞ்சுகள் வளர்க்கப்படுகிறார்கள்.  அவர்கள் வாழ்வியலோடு ஆங்கிலம் பின்னிப் பிணைந்து விட்டது. தமிழ் அவ்வப்பொழுது அவர்களுக்கே தெரியாமல் வந்து செல்கிறது.
      
       ஆங்கில வருடப் பிறப்பை கோலாகலமாகக் கொண்டாடும் நமக்கு ஒவ்வொரு வருடமும் புதிதாய் பிறக்கும் தமிழ் வருடத்தின் பெயர் தெரியாது.  தமிழ் மாதங்களின் பெயரையும், அவ்வப்போது வரும் பண்டிகைகளே நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பது கூட நாகரீகக் குறைவு என்றாகிவிட்டது. ஆனால் அமெரிக்கவாழ் தமிழர்களோ கரிகாலன், எழிலரசன் என்று தூய தமிழ்ப்பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு வைத்து, அழைத்து மகிழ்கிறார்கள்.

       மொய்க் கவரில் கூட தமிழில் பெயர், விலாசம் எழுதுவது கவுரவக் குறைச்சலாகிவிடுகிறது.  தோட்டத்தில் உள்ள தென்னையும், வாழையும் இன்று குழந்தைகளுக்கு கோகனட் ட்ரீயாகவும், பனானா ட்ரீயாகவும் காட்சியளிக்கின்றன. மாமா, அத்தை என்று அழைக்கப்பட்ட அக்கம்பக்கத்தினர், உறவினர் எல்லாம் இன்று அங்கிள், ஆண்ட்டியாக மாறி வலம் வருகின்றனர்.

       தொலைக்காட்சியில் தமிழ் சமையல் குறிப்பு நிகழ்ச்சியில் நவீன நங்கைகளுக்கு மல்லி, கறிவேப்பிலை கூட வாயில் வருவதில்லை.  கோரியண்டர் லீவ்ஸை டேமரிண்ட் கரைசலில் போட வேண்டுமென ஆங்கிலப் பாடம் நடத்துவதுதான் வேடிக்கை.

       தமிழ் வழி பயில்கிற மாணவர்களை, ஏதோ பாவப்பட்டவர்களைப் போல பார்க்கிற மனோபாவம் மக்களிடம் மட்டுமல்ல ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களிடமும் கூட அதிகமாக வெளிப்படுகிறது. 


திரைப்படங்களோ கொச்சையான தமிழ் வார்த்தைகளைத் தத்து எடுப்பதையே சடங்காக வைத்திருக்கின்றன.  முட்டை பொடிமாசும், கொத்துப் புரோட்டாவும் சூப்பர் ஹிட் தமிழ்ப்பாடலின் பல்லவியாகிவிடுகின்றன.

       தமிழ் ஆர்வலர்கள் அல்லது தமிழின் அவசியம் பற்றி வலியுறுத்துபவர்கள் அனைவரும் ஏதோ பூமிக்கு வழி தவறி வந்துவிட்ட வேற்று கிரகவாசிகள் போல பார்க்கப்படுகிறார்கள்.

       கடிகாரம் கூட எய்ட் தர்ட்டி, நைன் பார்ட்டி பைவ் என்று ஆங்கிலத்திலேயே மணி சொல்லுகிறது. தமிழனின் தயிர் சாதம் கர்டு ரைஸாக மாறி ஒரு நூற்றாண்டாகிவிட்டது.  இலவம் பஞ்சு மெத்தையில் படுத்துறங்கிய தமிழன் இன்று ஃபோம் மெத்தை என்ற பெயரைக் கேட்டே உறங்குகிறான்.

       கம்பனையும், வள்ளுவனையும், கல்கியையும் படிப்பவர்கள் பழந்தமிழர் என்ற புதிய இனமாகவே கருதப்படுகின்றனர்.  புரிகிறதோ இல்லையோ ஆங்கில நாவலையும், ரஷ்ய நாவலையும் பற்றி விவாதிப்பவனுக்கு இங்கே மிகச் சிறந்த அறிவாளி பட்டம் தரப்படுகிறது.



       தமிழ் நம் தாய்மொழி என்பது மட்டுமே நாம் அறிந்த ஒன்று. ஆனால் இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் ஒன்று தமிழ் என்பது எத்துணை பேருக்குத் தெரியும்?.  தென்னாப்பிரிக்கா தன் அரசியலமைப்பில் தமிழுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.  மலேசியாவின் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் இடம் பெற்றுள்ளது.

       மலேசியாவில் தொடக்கப்பள்ளிகள் மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது.  அங்கு நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட தமிழ்த் தொடக்கப்பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக இயங்கி வருகின்றன.  மொரீசியஸ் நாட்டுப் பணத்தில் இன்றும் தமிழ் எழுத்துக்கள் அச்சிடப்படுகின்றன.

       தமிழ் தொன்மையான மொழி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆயினும் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட முதல் இந்திய மொழி தமிழ்தான்.  மதிப்பிற்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். .பி.ஜே. அப்துல்கலாம் அவர்களும், தமிழ் வழிக்கல்வி கற்றவரே.  மொழியின் மேன்மையும், அவசியமும் புரிந்ததாலேயே அவர் வானளாவிய புகழை எட்டிய பின்பும், தாய்மொழியை உலக அரங்கில் கவுரவப்படுத்தினார்.

       இன்று உலக மொழியாக வருணிக்கப்படும் ஆங்கிலத்திற்கு பல வார்த்தைகளைக் கொடுத்தது நம் தமிழ்தான்.  உதாரணத்திற்கு கேட்டமரன் எனப்படும் கட்டுமரம், மாங்கோ எனப்படும் மாங்காய், சர்ப்பன்ட் எனப்படும் சர்ப்பம் என எத்தனையோ அடுக்கிக் கொண்டே போகலாம்.

       விஞ்ஞானம் முதல் மெய்ஞானம் வரை, மருத்துவம் முதல் கணிதம் வரை அனைத்து அறிவுகளையும் தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கும் மொழி தமிழ்மொழி. ஆனால் அதன் மகத்துவம் தமிழின் மடியில் பிறந்த மைந்தர்களுக்கு முழுவதும் விளங்கவில்லை என்பது வேதனையே.

உலகத்தோடு, தொழில்நுட்பத்தோடு போட்டியிட ஆங்கிலம் அவசியம்.  ஆனால் அதற்காக தாய்மொழியாம் தமிழை அப்புறப்படுத்துவதில் என்ன நியாயம் இருகிறது?

       தமிழின் முக்கியத்துவத்தை அதிகரிக்க சில சட்டத்திருத்தங்கள் அவசியம்.  தமிழ்நாடு முழுமைக்கும் அனைத்து பள்ளிகளும் தமிழை முதல் பாடமாக அறிவிக்க வேண்டும்.  மாணவர்கள் தமிழில் பேச அனுமதிக்கப்பட வேண்டும்.  ஒவ்வொரு மாணவனுக்கும் தமிழை பிழையறப் பேச, எழுதத் தெரிந்திருக்க வேண்டும். பத்து, பனிரெண்டாம் வகுப்புகளின் பொதுத் தேர்வு முடிவுகள் தமிழில் பெறும் மதிப்பெண்களைச் சார்ந்து அமைய வேண்டும். நுழைவுத்தேர்வுகள் அனைத்திலும், மாணவர் சேர்க்கையில் தமிழ் மதிப்பெண்கள் அடிப்படைத் தகுதியாக இடம்பெற வேண்டும். உயர் கல்வி அல்லது பிற கல்வி பெற விழையும் மாணவர்களின் அடிப்படைக் கல்வித் தகுதியில் தமிழ் மதிப்பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

       அரசுப் பள்ளிகள் தரம் தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அமைய வேண்டும். மக்களின் ஆங்கில மோகத்தை தங்களுக்கு சாதகமாக்கி காசு சம்பாதிக்கும் தனியார் பள்ளிகளே இன்று தமிழ் மொழியின் தீவிர எதிரிகளாக உள்ளன.  இவைகள் காட்டும் ஆங்கில உலகம் நம் அடுத்த தலைமுறையை தமிழ் மொழியை விட்டே வெகு தூரம் அழைத்துச் செல்கிறது. இவை அனைத்தையும் சட்டம் மூலம், அரசால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.

1330 திருக்குறளையும் அதன் பொருளுடன் மாணவர்கள் அறிந்திருக்கின்ற நிலை வர வேண்டும்.  இன்று இப்பணியை முடிந்த வரை திருவள்ளுவர் கழகங்கள் ஆங்காங்கே செய்து கொண்டிருக்கின்றன. பள்ளிகளில் தினம் ஒரு திருக்குறள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.  சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு உள்பட அனைத்து இலக்கியங்களும் தினம் ஒரு பாடலாக மாணவர்களைச் சென்றடைய வேண்டும்.


இதுமட்டுமல்லாமல் தமிழின் இலக்கியங்கள் பள்ளி, கல்லூரிகளில் தனிப்பாடமாக விரிவுபடுத்தப்பட வேண்டும். தமிழ் கற்கும் மாணவர்களுக்கு மட்டுமே தரப்படும் இந்த இலக்கிய அறிவு அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய மொழிப்பாடம் என்ற பெயரில் கொடுக்கப்பட வேண்டும்.

தமிழில் புலமை பெறும் மாணவர்களுக்கு அவர்களின் கல்வி உதவித் தொகையை அரசே ஏற்க வேண்டும்.

       ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் ஒவ்வொரு மாணவருடைய தமிழறிவு, தமிழ் விழிப்புணர்வு குறித்த சிறப்புத் தேர்வுகளை தமிழக அரசே நடத்த வேண்டும்.  இதன் மூலம் நமது சந்ததிகளுக்கு தமிழ் பள்ளியிலேயே பசுமரத்தாணியாக பதிந்து விடும்.

தமிழ் அறிவுக்கான கலந்துரையாடல்கள், போட்டிகள், கலந்துரையாடல்கள், வினாடி வினா போன்றவை பள்ளி, கல்லூரிகளின் கால அட்டவணையில் கண்டிப்பாக இடம் பெற்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

பழந்தமிழரின் வாழ்க்கை முறைகள் மாணவர்களைச் சென்றடைய வேண்டும். இயற்கையோடு இயைந்த அவர்களின் வாழ்வு, இயற்கையை வணங்கிய பாங்கு அனைத்தையும் தமிழ் மொழி இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும். பூமி முதல் வானம் வரை பேணிக்காத்த நம் தமிழனின் அறிவு உலகையே வியக்க வைக்கும். அப்பொழுதுதான் தமிழ் மொழியின் மகத்துவமும், நம் முன்னோர் பெருமையும் இச்சந்ததியினரின் அறிவுக் கண்களைத் திறக்கும்.


தமிழர்களின் உணவு முறைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.  உணவே மருந்து, மருந்தே உணவு என்ற தமிழரின் வாழ்வியல் பீட்ஸாவையும், பிரைட் ரைஸையும் தேடியலையும் இத்தலைமுறைக்குப் பாடமாக அமையும்.  தமிழர்களின் உடல் உழைப்பில் கலந்திருக்கும் உடற்பயிற்சிகள், ஆரோக்கிய உணவு மற்றும் ஆரோக்கிய வாழ்வு அனைத்தையும் இந்த நவீன யுகம் முழுவதுமாய் தெரிந்து கொள்ள வேண்டும்.

சித்த மருத்துவத்தில் தமிழர்கள் கோலோச்சியிருந்தனர்.  மனிதர் காலடி ஓசை கேட்டால் பூமிக்குள் மறைந்து கொள்ளும் தாவரங்களைக் கூட நம்மவர்கள் கண்டுபிடித்து பெயரிட்டு அழைத்துள்ளனர். ஒவ்வொரு மூலிகைக்கும் தனித்தனி மருத்துவ குணம் உண்டென அறிந்திருந்தனர்.  வெறும் இலைச் சாற்றை தடவி பிளவுபட்ட சதைகளை மூடினர்.  முறிந்த எலும்புகளை ஒன்று சேர்த்தனர்.  பாம்புக்கடி முதல் உயிர்க்கொல்லி நோய் வரை அனைத்திற்கும் சித்த மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன.

இத்தகு பெருமை வாய்ந்த நம் தமிழ் மருத்துவத்தின் சிறப்பை முழுவதுமாய் வெளிக்கொணர வேண்டும்.  தமிழ் மொழியில் உள்ள சித்தர்களின் மருத்துவ நூல்கள் எளிமையாக்கப்பட்டு மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். 

ஜிம்களையும், ஃபிசிகல் பிட்னெஸ் சென்டர்களையும் தேடி ஓடும் இளைய தலைமுறைக்கு நமது யோகக் கலையின் சிறப்பை முழுமையாய் விளக்கும் தமிழ் நூல்கள் அதிகம் வெளிவர வேண்டும்.  திருமூலரின் திருமந்திரம் மக்களைச் சென்றடைய வேண்டும்.  மனித சுவாசம் மற்றும் நாடி, நரம்பு மண்டலங்கள் தொடர்பாக தமிழ் புலவர் ஓளவையார் பாடிய பாடல்களை வெளியுலகம் அறிய வேண்டும்.

யோகக் கலையின் மூலம் கூடு விட்டு கூடு பாய்ந்த நம் சித்தர்களின் வரலாறு தெளிவாக அறியப்பட வேண்டும்.  மரணத்திற்கு அப்பாற்பட்ட வாழ்வைப் பற்றியும் தமிழ் விளக்குகிறது.  தமிழ் மொழி ஒன்றே தமிழரின்  பல்துறை அறிவையும் நமக்குத் தரும் பொக்கிஷமாய் நம் கண் முன்னே நிற்கிறது.

வெளியுலகுடன் போட்டியிட ஆங்கில அறிவையும் திறம்பட மாணவர்களுக்கு கொடுக்கும் பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது.  தமிழும், ஆங்கிலமும் பிரித்தறிய முடியாத வகையில் கல்வி என்பது தரப்பட வேண்டும்.  அப்பொழுது மாத்திரமே தமிழைப் புறக்கணித்து ஆங்கிலம் மட்டும் கற்கும் நிலை மாறும்.

தமிழர்களின் கணித அறிவு அபாரமானது.  ஒன்றிலிருந்து தொடங்கி ஒவ்வொரு எண்ணிற்கும் தனித்தனி குறியீடுகள் தமிழில் உள்ளன.  ஒவ்வொரு பின்னத்திற்கும் தமிழ்ப் பெயர்கள் உள்ளன. 64ல் 3 பங்கு முக்கால் வீசம் எனவும், 80ல் 3 பங்கு காணி எனவும் அழைக்கப்படுகிறது.


எண்களின் எல்லை எதுவரையாயினும் அதுவரைக்கும் தமிழ்ப் பெயர்கள் உள்ளன. பத்தாயிரம் கோடி  கும்பம் எனவும், கோடி கோடி  முக்கோடி  பிரமகற்பம் எனவும் அழைக்கப்படுகிறது.  நீட்டலளவில் சாண், முழம், காதம் எனவும் நிறுத்தலளவில் வராகனெடை, மணங்கு போன்ற வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளன.

பொன் நிறுத்தலில் குன்றிமணி, மஞ்சாடி, கழஞ்சு போன்றவை இடம்பெற்றுள்ளன.  முகத்தல் அளவில் ஆழாக்கு, உழக்கு, குறுணி எனப்பல அளவைகள் தமிழில் உள்ளன.

 தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல.  உண்மையில் தமிழ் ஓர் அறிவுசார் மொழியென அகிலம் அறிய வேண்டும்.

இணையம் முதல் பல இடங்களில் தமிழை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுவோர் மிகத் தூய தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துவதை தற்காலிகமாய் தவிர்க்க வேண்டும். இவைகள் சில நேரங்களில் எளிதாக புரிந்து கொள்ள இயலாத வகையில் இருக்கின்றன.  மேலும் சலிப்பூட்டுவதாகவும் உள்ளன.  சில சமயங்களில் தமிழ் மீது ஆர்வம் உள்ளவர்கள் கூட ஆங்கிலத்தை நாடும் நிலையை இது ஏற்படுத்துகின்றது.

தமிழ் என்பது வாசிக்க, எழுத மற்றும் புரிந்து கொள்ளவும் கூடிய எளிமையான மொழி என்ற எண்ணத்தை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டிய கடமை தமிழார்வலர்களுக்கு இருக்கிறது.  இளைஞர்கள் முதலில் தமிழுக்குள் ஆர்வமாய் நுழைய வேண்டும்.  பின்பே அதனுள் ஆழமாய் பயணித்து தமிழின் பழமையை, புராதனச் சிறப்பை அவர்கள் உணர வேண்டும்.

மின்நுட்ப சாதனங்களான கணிணி, கைபேசி, மடிக்கணிணி என அனைத்திலும் தமிழ் எளிதாக இடம் பிடிக்க வேண்டும். இளைஞர்கள் மட்டுமல்ல, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் தாங்கள் விரும்பியதை சுலபமாய் தமிழில் தேடித் தெரிந்து கொள்ளும் நிலை வர வேண்டும்.

இண்டர்நெட் முதல் வாட்ஸ்அப் வரை தமிழில் எளிதாய் தட்டச்சு செய்யும் வகையில் இணைய தமிழ் உலகம் விரிவுபடுத்தப்பட வேண்டும். 

  தமிழ் அமைப்புகள், திருவள்ளுவர் கழகங்கள் அனைவரின் இலக்கும் குடும்பத் தலைவிகளை நோக்கியே இருக்க வேண்டும்.  பாரதிதாசன் குறிப்பிட்டது போல் ஒரு பெண்ணின் கல்வியறிவு ஒரு குடும்பத்தின் ஒளி விளக்காக மாறும். இன்றைய இல்லத்தரசிகளில் பெரும்பான்மை இளம் பெண்களின் தேர்வும் ஆங்கிலமாகவே இருக்கிறது.  அவர்கள் சர்வ சாதாரணமாக தங்கள் குழந்தைகளை ஆங்கிலக் குழந்தைகளாக மாற்றி வருகின்றார்கள். அந்த இளம் தாய்களுக்கு தமிழின் மேன்மையை கொண்டு சேர்ப்பது தமிழ் அமைப்புகளின் அத்தியாவசியக் கடமையாகும்.

தமிழ் திரையுலகம் தாய்மொழியின் வளர்ச்சியில் தனக்குள்ள பொறுப்பை அறிய வேண்டும்.  தமிழ் மொழி வளர்ச்சியின் நீண்ட கால வரலாற்றில் கவிஞர்கள் மற்றும் கலை உலகத்தினர் அனைவருக்கும் பெரும் பங்கு இருந்திருக்கிறது. அதை இப்பொழுதுள்ள கலைஞர்கள் உணர வேண்டும். இன்றைய தமிழ் படைப்புகளே எதிர்கால தமிழ் உலகத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அறிமுகப்படுத்தும் ஆவணங்கள் என்ற அறிவு படைப்பாளிகளுக்கு இருக்க வேண்டும்.  தரமுள்ள படைப்புகளே வெளிவர வேண்டும். 


தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க சட்டம், வரிவிலக்கு போன்ற இழி நிலைகள் மாற வேண்டும்.  பாடல்கள் என்ற பெயரில் நடைபெறும் தமிழ் மொழிக் கொலைகள் தடை செய்யப்பட வேண்டும். வசனங்களில் தமிழின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். ஆபாசம் தவிர்க்கப்பட வேண்டும்.  இந்த கட்டுப்பாடுகளை கலை உலகம் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.  சமுதாயத்தின் நன்மை மற்றும் மொழியின் வளர்ச்சிக்காக பரிந்துரைக்கப்படும் இக்கட்டுப்பாடுகள் கலைஞர்களை அடிமைப்படுத்துவதற்காக அல்ல அவர்களை நெறிப்படுத்துவதற்காக என்பதை கலைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். படைப்பாளி என்று தன்னை அடையாளப்படுத்தும் ஒவ்வொரு மனிதனும் சாமான்ய மனிதனே.  அவனுக்கும் சமூகப் பொறுப்புணர்வு மற்றும் மொழிப்பற்று என்பது மிக அவசியம். பொறுப்பற்ற படைப்புகளின் மூலம் தமிழ்ச் சமுதாயத்தைக் கேவலமாக சித்தரிப்பதை நிறுத்த வேண்டும்.

தமிழ் பத்திரிக்கைகள் வியாபார நோக்கைத் தாண்டி தமிழ் வளர்க்கும் முயற்சியில் தமக்குரிய கடமையை ஆற்ற வேண்டும்.  அரிய தமிழ் இலக்கியங்கள், அவைகளின் பொருள்கள், பெருமைகள் அனைத்தும் தின செய்தியாக மக்களைச் சென்றடைய வேண்டும்.  தரமான தமிழ் படைப்புகளையே அச்சிலேற்ற வேண்டும்.  பத்திரிக்கைகளின் பரிசைப்பெறும் தமிழ் படைப்புகள் மொழியின் மேன்மையை எடுத்துச் சொல்லும் விதத்தில் அமைய வேண்டும்.  நவீன இலக்கிய நடை என்ற பெயரில் தமிழ் மொழி சிதைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும்.  தமிழ் மொழி வளர்ச்சிக்காக தனி பக்கங்கள் இடம்பெற வேண்டும்.  இப்பக்கங்கள் எளிமையாகவும், படிப்பவர்களை ஈர்க்கும் வகையிலும் அமைய வேண்டும்.   

1997ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலக அளவில் 70 முதல் 80 மில்லியன் மக்கள் தமிழைத் தாய்மொழியாக பேசுகின்றனர்.  8 மில்லியன் மக்களின் இரண்டாவது மொழியாகத் தமிழ் விளங்குகிறது.  தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில், உலக அளவில் தமிழ் 18வது இடத்தில் உள்ளது.     

தமிழர்கள் முடிந்த வரையில் ஆங்கிலக் கலப்பின்றி பேச முயற்சித்தாலே தமிழ் புத்துயிர் பெற்றுவிடும் என்பதே உண்மை.   தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளைத் தாய் மொழிகளாய்க் கொண்டவர்கள் தத்தம் தாய்மொழிகளில் உரையாடுவதைப் பார்க்கிறோம். குறைந்த பட்சம், தமிழர்கள் சந்திக்கும்போது ஒருவருக்கொருவர் தமிழில் உரையாடினாலே நம் தாய்மொழி இழந்து கொண்டிருக்கிற பெருமையை மீண்டும் பெற்றுவிடும். 
தமிழன் என்ற உணர்வு குறுகிய உணர்வல்ல.  அது மிக நீண்ட வியத்தகு வரலாறு பற்றிய விழிப்புணர்வு மட்டுமே. தமிழ் மொழி, தமிழனின் மணி மகுடம் ஆகும்.  நம் தாய்மொழியின், வேர்களின் விழுமியங்கள் அறிந்து தலைமுறைக் கிளைகளில் தமிழ் வளர்ப்போமாக. தாய்மொழி என்பது தாயின் மறு உருவம் என்று அறிவோமாக. 

வாழ்க தமிழ்!!!   வளர்க தமிழ்!!!





No comments:

Post a Comment

.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}