Saturday 12 March 2016

வல்லமை தாராயோ? - கவிதை

வல்லமை தாராயோ?




டாஸ்மாக்குகள் நர்த்தனமாடும் மண்ணில்
மதுவிரட்டி மகாத்மாவை உயிர்ப்பிக்க
தேசமே உன் மாணவனுக்கு
வல்லமை தாராயோ?

ரோட்டுக் குடிமகனை மேட்டுக் குடிமகனாக்கும்
அரசியல் தொழிலுக்குள் தொலைந்து போன
காமராசனையும், கக்கனையும் மீட்டெடுக்க
தேசமே உன் பிள்ளைகளுக்கு
வல்லமை தாராயோ?

வெள்ளைக்காரன் சவைத்து துப்பிய ஆங்கிலத்தில்
நுரைத்துக் குளிக்கும் உன் மக்கள்
பாவேந்தனின் பைந்தமிழைத் தேடித் திரிய
தேசமே நீ
வல்லமை தாராயோ?

எதிர்ப்புகளை எதிர்த்து தள்ளி
அன்பில் தெரசாக்களையும்,
அறிவில் மலாலாக்களையும்
மட்டுமே ஈன்றெடுக்க
தேசமே உன் பெண்ணினத்திற்கு
வல்லமை தாராயோ?

கல்வியை கரும்பாக்கி
கற்றலை இனிமையாக்கி
கலாம்களைக் கண்டறிய
தேசமே உன் கல்விச் சாலைகளுக்கு
வல்லமை தாராயோ?
                     --- இரா. சைலஜா சக்தி

No comments:

Post a Comment

.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}