Saturday 12 March 2016

அமுது படைக்கும் குப்பைகள்...(கவிதை)

அமுது படைக்கும் குப்பைகள்




கத்திரி வெயில் காய்த்தெடுத்தது என்னை
பாதுகாப்பு கவசமாய் என்னுடன்
பவனி வந்த குடையோ
சூட்டைக் குடித்து கொப்பளித்தது

வீட்டை நெருங்குகையில்
மூளை மணியடித்துவிட்டது
போய் சமைக்க வேண்டும் என

பற்றி விட்ட எரிச்சலில்
பத்தடி தூரம் பாதம் பதித்தேன்

ஏதோ உறுத்தியது
திரும்பிப் பார்த்தேன்

குப்பைகளுக்கு நடுவே
பிளாஸ்டிக் பாட்டில்களை
கண்டெடுத்த பரவசத்துடன்

மதிய வெயிலில் மண் தரையில்
உட்கார்ந்திருக்கும் அந்த முதியவர்

மனம் உள்ளுக்குள்ளே கூவியது

செருப்பின் சூடு
பாதம் வருடியதால்
பதறிய நானெங்கே?

நாம்
கசக்கி எறிந்த காப்பிக் கப்புகளுக்கும்
வீசி எறிந்த கூல்டிரிங்ஸ் பாட்டில்களுக்கும்
நடுவே வெற்றுக் கால்களை அண்டக்கொடுத்து
காய்த்துப் போன விரல்களால்
களைகளுக்குள் களையெடுக்கும் அவரெங்கே?


அவரின்
பசி வெயிலை வென்றுவிட்டது
உழைப்பு முதுமையை வென்றுவிட்டது

வெட்கி தலைகுனிந்தேன்
வேகமாய் நடந்தேன்
ரைஸ் குக்கரில் சாதம் வைக்க.

             --- இரா. சைலஜா சக்தி

                

No comments:

Post a Comment

.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}